கோலாலம்பூர், செப் 29- நேற்று நள்ளிரவு 12.00 மணி வரை பதிவான 11,332 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களில் 2.2 விழுக்காடு அல்லது 247 மட்டுமே மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பைக் கொண்டிருந்தன.
எஞ்சிய 11,085 பேர் அல்லது 97.8 விழுக்காட்டினர் தொற்றுக்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் கட்ட மற்றும் லேசான அறிகுறியைக் கொண்ட இரண்டாம் கட்ட நோயாளிகள் என்று சுகாகாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மூன்றாம் கட்ட நோயாளிகள் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்ட வேளையில் நான்காம் கட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படும். ஐந்தாம் கட்ட நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்படும்.
நேற்று 14,160 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததைத் தொடர்ந்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 20 ஆயிரத்து 99 பேராக உயர்ந்துள்ளது என நோர் ஹிஷாம் சொன்னார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது 986 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 848 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 138 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான சந்தேகத்தின் பேரில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று புதிதாக 15 நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 9 மையங்கள் சமூகத்திலும் ஆறு மையங்கள் வேலையிடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டன.