கோலாலம்பூர், செப் 29- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இவ்வாண்டு ஆகஸ்டு 20 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 140,608 பேர் வேலை இழந்துள்ளனர்.
சொச்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள சிப் எனப்படும் தொழிலாளர் காப்புறுதி முறையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை பெறப்பட்டதாக மனிவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்றினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தாக்கத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளதோடு அவர்கள் மீது பரிவும் கொண்டுள்ளது. இத்தகைய நிச்சயமற்ற சூழலில் வேலை இழந்துள்ளவர்களுக்கு ஆதரவும் உதவியும் தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.
மக்களவையில் இன்று கோத்தா சமராஹான் தொகுதி உறுப்பினர் ரூபியா வாங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இப்பிரச்சனையைக் கையாள்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ரூபியா கேள்வியெழுப்பியிருந்தார்.
சிப் எனப்படும் தொழிலாளர் காப்புறுதி முறையின் கீழ் நிதியுதவி, வேலையைத் தேடி தரும் உதவி உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை பத்து லட்சம் வேலை தேடுவோர் MYFutureJobs என்ற அகப்பக்கத்தில் பதிவு செய்திருந்ததாக கூறிய அவர், அவர்களில் 203,102 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக சொன்னார்.