கோலாலம்பூர், செப் 30- மக்களவையில் இன்று பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சர் மற்றும் துணையமைச்சர் வழங்கிய தெளிவற்ற பதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அமைச்சரின் குழப்பத்தை ஏற்படுத்தும் பதிலால் ஏமாற்றமடைந்த சிம்பாங் ரெங்கம் தொகுதி உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக், அமைச்சரால் தெளிவாக விளக்க முடியாவிட்டால் பதிலை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இலக்கவியல் பொருளாதாரம் குறித்து பாசீர் மாஸ் தொகுதி பாஸ் கட்சி உறுப்பினர் நிக் முகமது அப்டோ நிக் அப்துல் அஜிஸ் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் துறை துணையமைச்சர் (பொருளாதாரம்) டத்தோ எட்டின் ஷியாலி ஷிட் பதிலளித்த போது அவையில் இந்த சர்ச்சை எழுந்தது.
துணையமைச்சர் பதிலளித்துக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட மஸ்லி, நாங்கள் பல நிமிடங்களாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால் உங்கள் பதிலில் எதுவுமே எங்களுக்கு விளங்கவில்லை என்றார்.
முன்னதாக, 1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம் குறித்து உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் துறை அமைச்சர் (சபா, சரவா விவகாரங்கள்) டத்தோஸ்ரீ டாக்டர் மெக்சிமஸ் ஓங்கிலி பதிலளித்துக் கொண்டிருந்த போதும் மஸ்லி குறுக்கிட்டு தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
முன்னாள் கல்வியமைச்சரின் அந்த கண்டனத்தை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் டத்தோ அஸார் அஜிசான், அனைவரும் புரிந்து கொள்ளும்படி தெளிவாகவும் எளிதான நடையிலும் பதிலளிக்கும்படி அனைத்து அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களை கேட்டுக் கொண்டார்.