ஷா ஆலம், அக் 1– நிலுவையில் இருக்கும் குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையை பொது மக்கள் எளிதாக செலுத்துவதற்கு ஏதுவாக ஷா ஆலம் மாநகர் மன்றம் இங்குள்ள பிளாசா ஷா ஆலமில் நாளை நடமாடும் அலுவலக சேவையை ஏற்படுத்தவுள்ளது.
இந்த நடமாடும் அலுவலகத்தின் வாயிலாக புகார் அளிப்பது, மதிப்பீட்டு வரியைச் சரிபார்ப்பது மற்றும் செலுத்துவது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியும் என மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றின் வாயிலாக கூறியது.
இந்த நடமாடும் அலுவலக சேவை நாளை சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செக்சன் 9, பிளாசா ஷா ஆலமில் வழங்கப்படும் என்று அவ்வறிக்கை தெரிவித்தது.
குற்றப்பதிவுகளுக்கான அபாரத் தொகையை குறைக்கும் இந்த அரிய சலுகையை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு பத்து வெள்ளி அபராதமும் இதர குற்றங்களுக்காக 70 விழுக்காடு வரையிலான அபராதமும் விதிக்கப்படுகிறது என அது குறிப்பிட்டது.
அக்டோபர் மாதம் முதல் தேதி தொடங்கி ஒரு மாத காலத்திற்கு வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு 10 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர் மன்றம் நேற்று அறிவித்திருந்தது.
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 21 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இந்த சலுகைகள் வழங்கப்படுவதாக டத்தோ பண்டார் டத்தோ ஜமானி மன்சோர் கூறினார்.