ஷா ஆலம், அக் 1- சிலாங்கூர் மாநிலத்தை ஊழலின் புகலிடமாக கருத முடியாது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிலாங்கூர் மாநில இயக்குநர் டத்தோ அலியாஸ் சலிம் கூறினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சிலாங்கூரிலுள்ள 2,616 அரசாங்க ஊழியர்களில் 267 பேர் மட்டுமே கைது செய்யப் பட்டதாக அவர் சொன்னார்.
கைதான 267 பேரில் ஒருவர் மட்டுமே உயர் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர். 77 பேர் நிர்வாக மற்றும் நிபுணத்துவ பிரிவைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 189 பேர் கீழ் நிலை ஊழியர்கள் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் ஊழலின் இருப்பிடம் என்று கூறமாட்டேன். நாம் அண்டை மாநிலங்களைக் கொண்டுள்ளதோடு கிள்ளான் பள்ளத்தாக்கு முதலீட்டு மையமாகவும் விளங்குகிறது என்று “சிலாங்கூர் ஊழலின் இருப்பிடம் என்பது உண்மையா?“ எனும் விவாத நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்.
ஊழல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் 306 சம்பவங்களுடன் சபா மாநிலம் முதலிடத்தில் உள்ள வேளையில் அதற்கு அடுத்த நிலையில் சிலாங்கூர் (267), பேராக் (265), சரவா (262), பகாங் (203), ஜோகூர் (201) ஆகிய மாநிலங்கள் உள்ளன என்றார் அவர்.
புகார் அளிக்கப்படும் அனைத்து சம்பவங்களும் ஊழல் சம்பந்தப்பட்டவை அல்ல எனக் கூறிய அவர், நிர்வாகம் சம்பந்தப்பட்ட புகார்கள் விசாரிக்கப்படுவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அவை ஊழல் தடுப்பு ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றன என்றார்.