ஷா ஆலம், அக் 4- இம்மாத இறுதிக்குள்ள சிகிஞ்சான் தொகுதியிலுள்ள இளையோரில் 100 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றிருப்பர் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.
இந்த இலக்கை அடைவதற்காக 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை கருத்தில் கொண்டு இளையோருக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக சபாக் பெர்ணம் மாவட்ட சுகாதாரத் துறையுடன் தாங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அணுக்கமான ஒத்துழைப்பின் காரணமாக தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள்ள இத்தொகுதியிலுள்ள இளையோர் முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பர் என நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.
அடுத்தாண்டு பள்ளித் தவணை தொடங்குவதற்கு முன்னர் நாட்டிலுள்ள இளையோரில் 80 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெற்றிருப்பதை தாங்கள் உறுதி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு கடந்த மாதம் 20 ஆம் தேதி கூறியிருந்தது.
இதனிடையே, சிகிசிஞ்சான் தொகுதியிலுள்ள அந்நிய நாட்டினர் உள்பட 90 விழுக்காட்டுப் பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்று விட்டதாக இங் தெரிவித்தார்.