ஷா ஆலம், அக் 5- பல்லின மற்றும் சமயத்தினர் வாழும் மலேசியாவில் பூப்பந்து விளையாட்டாளர் எஸ்.கிஷோனாவுக்கு எதிராக கூறப்பட்ட இனவாதப் போக்கிலான விமர்சனம் ஏற்புடையது அல்ல என்று மக்களவையில் கூறப்பட்டது.
மலேசியர்களை ஒன்றுபடுத்தக் கூடிய நல்லிணக்கத தளமாக விளையாட்டு நெடுங்காலமாக விளங்கி வருவதாக ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹலிமா சித்திக் கூறினார்.
எந்த இனத்தினரின் மனதையும் புண்படுத்தக்கூடிய வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மலேசியர்களை குறிப்பாக சமூக ஊடக பயனர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
கிஷோனாவுக்கு எதிராக அரசியல்வாதி ஒருவர் இனத்துவேஷ வார்த்தைகளை பிரயோகித்தது தொடர்பில் ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
கிஷோனா தனது நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர் என்றும் நாட்டிற்கு புகழ் சேர்க்கும் அவருக்கு உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்றும் சான கீ சின் வலியுறுத்தினார்.
கிஷோனாவின் தியாகம் மிகப்பெரியது. நாட்டிற்கு பெருமை சேர்க்கும் முயற்சியின் போது அவர் இரு முறை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். தேசிய வீராங்கனையாக அவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனறு அவர் கூறினார்.