ஷா ஆலம், அக் 5- கிழக்குக் கரை இரயில் திட்டத்திற்கான (இ.சி.ஆர்.எல்.) வழித் தடத்தை தீர்மானிப்பதற்காக சிலாங்கூர் மற்றும் மத்திய அரசுகளுக்கிடையே தொடர்ந்து பேச்சுவார்தை நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.
இ.சி.ஆர்.எல். வடப்பகுதிக்கான வழித் தடத்தின் ஒரு பகுதியாக விளங்கும் செரெண்டா புறவழியை இணைக்கும் திட்டம் தொடர்பில் இரு தரப்பும் இணக்கப்புள்ளியைத் தொட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இவ்விவகாரத்திற்கு சிலாங்கூர் அரசுடன் சுமூகமான முறையில் தீர்வு காண விரும்புகிறோம். இதற்கு முன்னர் ஏழு விவகாரங்கள் மீது சிலாங்கூர் அரசுடன் பேச்சு நடத்தினோம். அப்பேச்சுக்களில் தீர்வுக்கான வெவ்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தினோம் என்றார் அவர்.
கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம். தவிர்க்க வேண்டியவற்றை தவிர்க்க முயல்கிறோம். இவ்விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு எட்டு மாதங்களைச் செலவிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
நீர் வளங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அந்த இரயில் திட்டம் தெற்கு வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சிலாங்கூரின் நிலைப்பாட்டை கூட்டரசு அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கடந்த மாதம் கூறியிருந்தார்.