சந்தையில் போதுமான அளவு கோவிட்-19 பரிசோதனைக் கருவிகள் கையிருப்பு
கோல பெராங், அக் 10- மாநில எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படவுள்ளதன் காரணமாக அதிகரித்து வரும் கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகளுக்கான தேவையை ஈடுசெய்யும் அளவுக்கு போதுமான கையிருப்பு உள்ளதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு உத்தரவாதமளித்துள்ளது.
தற்போது சந்தையில் ஆறு விதமான கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகள் உள்ள நிலையில் இந்த கருவியை உற்பத்தி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் 28 நிறுவனங்களுக்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அதன் துணையமைச்சர் டத்தோ ரோசால் வாஹிட் கூறினார்.
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மாநில எல்லைகளைக் கடப்பதற்கு முன்னர் கோவிட்-19 நோய்ப் பரிசோதனையை மேற்கொள்ளும்படி பொதுமக்களுக்கு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதால் சுயப் பரிசோதனை கருவிகளுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சந்தையில் அதிகரித்து வரும் சுயப் பரிசோதனை கருவிக்கான தேவையை ஈடு செய்யும் வகையில் தொடர்ந்து அக்கருவியின் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என அவர் சொன்னார்.
ஆகவே, பரிசோதனைக் கருவிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 பரிசோதனைக் கருவிகளை வாங்குவதற்கு உதவித் தொகை வழஙகப்பட வேண்டும் என்று சில தரப்பினர் கோரிக்கை விடுத்து வருவது குறித்த கேள்விக்கு இதன் தொடர்பில் விரிவான அளவு ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது என அவர் பதிலளித்தார்.