கிள்ளான், அக் 10- இவ்வாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 179 வெள்ளியை சிலாங்கூர் அரசு வருமானமாக ஈட்டியுள்ளது. 220 கோடி வெள்ளியை வருமானமாக ஈட்டுவதற்கு மாநில அரசு நிர்ணயித்துள்ள இலக்கில் இது 81.48 விழுக்காடாகும்.
இவ்வாண்டு தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு மத்தியிலும் இந்த வருமானத்தை மாநில அரசு ஈட்டியுள்ளது வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அந்த தொகையில் 81 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி அல்லது 67.18 விழுக்காடு நிர்வாகச் செலவினங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. வருமானம் ஈட்டுவதில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதோடு நிர்வாகமும் முறையாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
மேம்பாட்டுச் செலவினம் 47 விழுக்காடாக அல்லது 52 கோடியே 34 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியாக உள்ளது. பல திட்டங்களுக்கு இன்னும் பணம் செலுத்தப்படவில்லை. எனினும், ஆண்டு இறுவாக்கில் அத்தொகை பட்டுவாடா செய்யப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
நேற்று இங்கு சிலாங்கூர் சமூகத் தலைவர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விளக்கமளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் அதன் தொடர்பான விவாதங்கள் ஒரு வார காலத்திற்கு நடைபெற்று பின்னர் அங்கீகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.