கோலாலம்பூர், அக் 11- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 80 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கல்வி மூத்த அமைச்சர் டத்தோ டாக்டர் டாட்ஸி ஜிடின் கூறினார்.
கல்வியமைச்சு சுகாதார அமைச்சுடன் இணைந்து இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட தகவல்களைத் தயாரிப்பதற்கான அணுகுமுறைகளை கல்வியமைச்சும் சுகாதார அமைச்சும் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதர தடுப்பூசித் திட்டங்களைப் போல் மாணவர்களுக்கான தடுப்பூசித் திட்டத்தின் தகவல்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த அணுகுமுறை உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கத்தில் கல்வியமைச்சின் கீழுள்ள பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசித் திட்டம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு புதிய பகுதி தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதன் வழி தங்கள் பிள்ளைகள் பயிலும் பள்ளிகளில் பதிவாகியுள்ள தடுப்பூசி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையை பெற்றோர்கள் அறிந்து கொள்ள இயலும் என்றார் அவர்.