ஷா ஆலம், அக் 11- கோலக் கிள்ளான், பெர்சியாரான் ராஜா மூடா மூசாவில் உள்ள பந்தாய் தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்து காரணமாக அம்மருத்துவமனையின் இரு வார்டுகளில் இருந்த 30 நோயாளிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப் பட்டனர்.
இச்சம்பவம் காரணமாக பணியில் ஈடுபட்டிருந்த இருபது மருத்துவப் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறினர். எனினும் இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
நேற்றிரவு 11.38 மணியளவில் அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து கோலக் கிள்ளான் தீயணைப்பு நிலையத்திலிருந்து 13 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோர்ஹஸாம் காமிஸ் கூறினார்.
இரவு 11.42 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள் அந்த மருத்துவமனையின் ஏ60 மற்றும் ஏ61 ஆகிய வார்டுகளில் தீ ஏற்பட்டுள்ளதைக் கண்டனர்.
உடனடியாக நோயாளிகள் மற்றும் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுததிய அவர்கள் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
பத்து நிமிடங்களில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக கூறிய அவர், தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராய்ப்பட்டு வருவதாகச் சொன்னார்.