கிள்ளான், அக் 11- மோரிப் முதல் பாகான் லாலாங் வரையிலான கடலோரப் பகுதியை மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரை 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என்று கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் புர்ஹான் அமான் ஷ கூறினார்.
அந்த கடற்கரையின் நெடுகிலும் உள்ள பகுதிகளை சுற்றுலா மையமாக மேம்படுத்த முடியும் என்று தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாரத்திற்கு உந்து சக்தியாக விளங்கக்கூடிய இத்திட்டத்தின் அமலாக்கம் குறித்து தாம் சுற்றுலா நிலைக்குழுவுடன் விவாதிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் இங்குள்ள விண்ட்ஹம் தங்கும் விடுதியில் இந்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
இளைய தலைமுறையினர் பொருளாதாரத்தில் வலுப்பெறுவதற்கு ஏதுவாக அத்தரப்பினரை மையமாகக் கொண்ட வாய்ப்புகள் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவில் ஏற்படுத்தித் தரப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் அரசின் திட்டங்களை அறிந்து கொள்வதற்கும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்வு பெரிதும் துணை புரிந்ததாக உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியு ஹிசியாட் ஹூய் கூறினார்.