ஷா ஆலம், அக் 13- மாநில எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதி கடந்த திங்கள்கிழமை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் பணியில் சிலாங்கூர் மாநில போலீசார் தீவிரமாக ஈடுபடுவர்.
இந்த சோதனை நடவடிக்கை தினசரி மேற்கொள்ளப்படும் என்றும் வார இறுதி நாட்களை மையமாகக் கொண்டு சிறப்பு திடீர் அதிரடி சோதனை நடத்தப்படும் என்றும் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.
மாநில எல்லைகளைக் கடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிகம் கூடுவர் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு நடவடிககைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் மாநில எல்லைகளைக் கடப்பதற்கு திங்கள் கிழமை முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த ஞாயிற்றுக் கிழமை கூறியிருந்தார்.
நாட்டிலுள்ள பெரியவர்களில் 90 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றதைத் தொடர்ந்து இந்த அனுமதி வழஙகப்படுவதாக அவர் தெரிவித்தார்.