ஷா ஆலம், அக் 13- நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்காக தாமான் டெம்ப்ளர் தொகுதி இரு நான்கு சக்கர இயக்க வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நீர் விநியோகத் திட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தொகுதி சட்டடமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கூறினார்.
நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை நாங்கள் உணர்ந்துள்ளோம். உதவி தேவைப்படுவோர் தொகுதி சேவை மையம், நகராண்மைக் கழக உறுப்பினர்கள் மற்றும் கிராமத் தலைவர்களை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.
இதனிடையே, நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்துடன் தாங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி மொக்தார் கூறினார்.
மேரு தொகுதியில் நீர் விநியோக செய்ய இரு லோரிகளை தயார் செய்யும்படி ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம். இத்தொகுதி மக்களின் தேவையை பூர்த்தி செய்ய இது போதுமானதாக இருக்கும் என நம்புகிறோம். அதே சமயம், நீரை சேமித்து வைக்கும்படி தொகுதி மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டி வருகிறோம் என்றார் அவர்.
சுங்கை சிலாங்கூர் முதல் கட்ட நீர் சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு இன்று தொடங்கி பெட்டாலிங், கோலாலம்பூர், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், உலு சிலாங்கூர், கோல லங்காட், கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 998 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியுள்ளது.
நாளை 14 ஆம் தேதி மாலை 4.00 மணி தொடங்கி நீரி விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.