ஷா ஆலம், அக் 18– இங்குள்ள செக்சன் 7, தேசிய இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 100 முகக் கவசங்களையும் கிருமி நாசினிகளையும் இன்று காலை வழங்கினார்.
ஐந்தாம் படிவ பள்ளித் தவணையைத் இன்று தொடங்கும் மாணவர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் இந்த நோய்த் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
இன்று பள்ளியில் கல்வியைத் தொடரும் மாணவர்கள் விரைவில் ஐந்தாம் தேர்வை எழுதவிருக்கின்றனர். சுய பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த பொருள்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துணையாக இருக்கும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்ததார்.
தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கு சிலாங்கூர் மாறிய போதிலும் அனைவரும் தொடர்ந்து எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, மந்திரி புசார் தங்கள் பள்ளிக்கு வருகை புரிந்ததற்காக தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முகமது இசா இஷாக் கூறினார்.
காலை, மாலை என இரு பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படும் இப்பள்ளியில் சுமார் 2,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.