ஷா ஆலம், அக் 21- இவ்வாண்டிற்கான தேசிய சுற்றுச்சூழல் தினத்தின் பிரதான ஏற்பாட்டாளர் என்ற முறையில் ஏழு திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சுமார் 800 மெட்ரிக் டன் எடையுள்ள மின்சார மற்றும் மின்னியல் கழிவுகளை சேகரிப்பது, 2025 ஆம் ஆண்டிற்குள் 10 கோடி மரங்களை நடும் இயக்கத்திற்கு ஆதரவாக மரம் நடும் இயக்கத்தை மேற்கொள்வது ஆகியவையும் இத்திட்டங்களில் அடங்கும் என்று அவர் சொன்னார்.
இது தவிர, சுற்றுச்சூழல் ஊடக பாராட்டு நிகழ்வு, வெபினர் விவாத நிகழ்வு, சுற்றுச்சூழல் இளையோர் பாதுகாப்பு நிகழ்வு, நீடித்த தொழில்துறை மீதான இயங்கலை கலந்துரையாடல்- சிலாங்கூரில் நீர் மாசுபாடு பிரச்சனையும் தீர்வும் ஆகிய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
சுற்றுச் சூழல் மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பை ஒழிப்பு பிரசாரம் ஆகியவற்றில் பங்களிப்பை வழங்கி வரும் தரப்பினருக்கு நீடித்த தொழில் துறை விருதளிப்பு நிகழ்வும் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நான்கு முக்கிய அடித்தளங்கள் வாயிலாக நீடித்த சுற்றுச்சூழலை நிர்வகிக்கும் சரியான தடத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.
சிறந்த நிர்வாகம், சட்டம், விரிவான அமலாக்க நடவடிக்கை, நீடித்த கல்வி மற்றும் விழிப்புணர்வு ஆகிய அம்சங்களையும் அது உள்ளடக்கியுள்ளது என்றார் அவர்.
இன்று இங்கு தேசிய சுற்றுச்சூழல் தினத்தை இயங்கலை வாயிலாக தொடக்கி வைத்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.