கோலாலம்பூர், அக் 25- பதினான்காவது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான இரண்டாவது கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரில் அவசர காலச் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 150வது ஷரத்தின் (3) வது பிரிவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அம்சங்களை விவாதித்து ஏற்றுக் கொள்வது உள்ளிட்ட விஷயங்களில் இக்கூட்டத் தொடர் கவனம் செலுத்தும்.
அவசர காலச் சட்டம் (அத்தியாவசிய அதிகாரங்கள்) 2021, அவசர காலச் சட்டம் (தொற்று நோய்த் தடுப்பூ மற்றும் கட்டுப்பாட்டு) 2021, அவசரகாலச் சட்டம் (தொழிலாளர்களுக்கான வீடமைப்பு, தங்குமிட மற்றும் அடிப்படை வசதிகள்) 2021 ஆகிய சட்டங்கள் தொடர்பான பரிந்துரையை பிரதமர் அவையில் தாக்கல் செய்வார் என்று கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, 1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்திற்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள சில ஷரத்துகளில் திருத்தம் செய்வது தொடர்பான சட்ட மசோதாவும் இக்கூட்டத் தொடரில் நாளை தாக்கல் செய்யப்படும்.
நாடாளுமன்றம் மற்றம் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துவாங்கு ஜாபர் அறிக்கை ஒன்றில் இவ்விபரங்களை வெளியிட்டுள்ளார்.