கோலாலம்பூர், அக் 30- கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரை விட அந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று நாடு முழுவதும் 6,060 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட வேளையில் 7,297 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நாட்டில் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 24 லட்ச்த்து 60 ஆயிரத்து 809 ஆக உள்ள வேளையில் அவர்களில் 96 விழுக்காட்டினர் அல்லது 23 லட்சத்து 61 ஆயிரத்து 919 பேர் குணமடைந்துள்ளதாக அவர் சொன்னார்.
நேற்று நோய்த் தொற்றுக்கு இலக்கான 6,060 பேரில் 98.3 விழுக்காட்டினர் அல்லது 5,955 பேர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எஞ்சிய 105 பேர் அல்லது 1.7 விழுக்காட்டினர் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
நேற்று பதிவான நோய்த் தொற்றுகளில் 5,759 உள்நாட்டினர் வாயிலாகவும் 288 அந்நிய பிரஜைகள் மூலமாகவும் பரவியவையாகும். மேலும் 13 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியானவையாகும்.
மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 570 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 300 பேருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்று நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
நாட்டில் நேற்று 11 புதிய தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் தலா நான்கு வேலையிடங்கள் மற்றும் உயர்கல்விக் கூடங்கள் சம்பந்தப்பட்டவையாகும்.