ஷா ஆலம், நவ 4- காப்பார்,தோக் மூடா படகுத் துறை பகுதியில் இன்று காலை 5.20 மணியளவில் கடல் நீர் மட்டம் 5.5 மீட்டர் உயரத்தை எட்டியது. இப்பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதோடு குடியிருப்பு பகுதியிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை என்று கிள்ளான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைவர் ஹுசேன் அப்துல் ரஹ்மான் கூறினார். இன்று அதிகாலை 5.20 மணியளவில் எழுந்த பேரலை காரணமாக நீர்மட்டம் அதிகபட்சம் 5.5 மீட்டர் வரை உயர்ந்தது. இந்நிலை 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்தது என்று அவர் சொன்னார். "எங்கள் கவலை என்னவென்றால் அடை மழையும் கடலில் இருந்து காற்றும் வீசினால் பேரலை ஏற்பட்டு கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது. எனினும் தற்போதைக்கு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றார் அவர். கடல் மட்டம் 5.6 மீட்டர் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இன்றைய வானிலை நிலவரத்தைப் பார்க்கும்போது, நிலைமை தொடர்ந்து சீராக இருக்கும் என கருதுகிறோம் என அவர் குறிப்பிட்டார்.