கோலாலம்பூர், நவ 12- பன்னிரண்டு வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்கு பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியை செலுத்தும் பணி அடுத்தாண்டு தொடங்கும். தற்போதைக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிகள் மட்டுமே 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்குப் பயன்படுத்த தயாராகியுள்ள வேளையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதிக்காக அது காத்திருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது. பன்னிரண்டு வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு பதிவு செய்வதற்கு தேவையான தரவுகளை பைசர் நிறுவனம் இவ்வாண்டு இறுதியில் மருந்தக ஒழுங்கு முறை ஆணையத்திடம் பதிவு செய்யும் என்று சுகாதார அமைச்சு எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளது. அமைச்சின் இந்த பதில் நாடாளுமன்றத்தின் அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. சிறார்களுக்கான பைசர் தடுப்பூசியைப் பெறும் நடவடிக்கையில் சுகாதார அமைச்சு தற்போது ஈடுபட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் பயன்பாட்டுச் செயல்முறை பெரியவர்களுக்கான தடுப்பூசியைக் காட்டிலும் மாறுபட்டுள்ளதால் தேசிய மருந்தக ஒழுங்கு முறை அமைப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதியைப் பொறுத்தே இதனைப் பயன்படுத்த முடியும் என்றும் அந்த பதிலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நாட்டிலுள்ள 59 லட்சம் சிறார்களுக்கு செலுத்த 1 கோடியே 18 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும். 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதா என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் எழுப்பிய கேள்விக்கு அமைச்சு இவ்வாறு பதிலளித்துள்ளது.