கோல குபு பாரு, நவ 12- கிழக்கு கரை இரயில் திட்டத்திற்கான (இ.சி.ஆர்.எல்.) வழித் தடம் தொடர்பில் இவ்வாண்டு இறுதியில் முடிவெடுக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இவ்விவகாரம் தொடர்பில் மத்திய அரசுடன் பேச்சு நடத்துவதற்கான இறுதி ஏற்பாடுகளை தமது தரப்பு மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார். ஏற்கனவே கூறியது போல் நாங்கள் தெற்கு வழித்தடத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். ஆனால், மத்திய அரசு வடக்கு வழித்தடத்தில் இத்திட்டத்தை தொடர விரும்புகிறது என்று அவர் சொன்னார். ஆகவே, இவ்விவகாரத்தில் நாங்கள் முடிவை எடுக்கவேண்டியுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் எங்களின் முடிவை அறிவிப்பதாக பிரதமரிடம் வாக்குறுதியளித்துள்ளேன் என்றார் அவர். இங்குள்ள தாமான் தாசேக் மில்லினியமில் சிலாங்கூர் மாநில நிலையிலான அனைத்துலக வன தினத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். உலு லங்காட், சிப்பாங் மற்றும் மேற்கு துறைமுகத்தை உள்ளடக்கிய தெற்கு வழித் தடத்தில் இரயில் திட்டத்தை தொடர்வதில் தாங்கள் உறுதியாக உள்ளதாக அமிருடின் கடந்த மாதம் கூறியிருந்தார் .