உலு சிலாங்கூர், நவ 14- இங்குள்ள செமாங்கோ, பாதுகாக்கப்பட்ட நிரந்தர வனப்பகுதியில் உரிய அனுமதியின்றி மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட 50 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து மலையேறிகளும் 21 முதல் 50 வயது வரையிலானவர்கள் என்று மாநில வனத் துறையின் இயக்குநர் டத்தோ அகமது பட்சில் அப்துல் மஜிட் கூறினார்.
தனிநபர்களின் ஏற்பாட்டில் பெரிய அளவிலான மலையேறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து நேற்று காலை 8.00 மணியளவில் அங்கு சிறப்பு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட அனைவரும் முறையான அனுமதியின்றி மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த அதிரடி நடவடிக்கையில் 19 வன இலாகா அதிகாரிகளும் கோல குபு பாரு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு காவல் துறையினரும் ஈடுபட்டனர் என்றார் அவர்.
தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் நேற்று மாலை 6.00 மணியளவில் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.