செலாயாங், நவ 14- தாமான் டெம்ப்ளர் தொகுதியில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தில் 4,000 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி பெற்றுள்ளனர்.
இரு கட்டங்களாக நடத்தப்பட்ட செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் 3,000 பேரும் நடமாடும் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் 1,000 திற்கும் மேற்பட்டோரும் தடுப்பூசி பெற்றதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கூறினார்.
இன்று 12 முதல் 17 வயது வரையிலான இளையோரை இலக்காக கொண்டு தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்திற்காக 500 சினோவேக் தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்திலுள்ள யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த தடுப்பூசி இயக்கம் நடத்தப்படுவதால் அந்நிய நாட்டினர் உள்பட அனைவரும் தடுப்பூசி பெறுவதற்கு நாங்கள் அனுமதியளிக்கிறோம் என்றார் அவர்.
இங்குள்ள கம்போங் செலாயாங் இண்டாவில் இன்று நடைபெற்ற இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தை ஆய்வு செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநில மக்கள் விரைந்து தடுப்பூசி பெறுவதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் அரசு கடந்த ஜூன் மாதம் செல்வேக்ஸ் கம்யூனிட்டி மற்றும் செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரி திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் இளையோருக்கான தடுப்பூசி செலுத்தும் இயக்க தொடங்கப்பட்டது.