மலாக்கா, நவ 16- மலாக்கா தேர்தலின் போது எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றத் தவறிய அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்களுக்கு 16 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.
கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வழங்கப்பட்ட அந்த குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையின் மதிப்பு 198,000 வெள்ளியாகும் என்று மலாக்கா மாநில துணைப் போலீஸ் தலைவர் டத்தோ ரசாலி அபு சமா கூறினார்.
அரச மலேசிய போலீஸ் படை 11 குற்றப்பதிவுகளையும் சுகாதார அமைச்சு இரு குற்றப்பதிவுகளையும் ஒருங்கிணைந்த குழு 3 குற்றப்பதிவுகளையும் வெளியிட்டதாக அவர் சொன்னார்.
தேர்தல் பிரசுரங்களை வழங்கும் நோக்கில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டது. உணவகங்களில் பிரசாரம் மேற்கொண்டது, பொதுமக்கள் கூடியுள்ள இடங்களில் செய்தியாளர் கூட்டங்களை நடத்தியது ஆகியவை அக்குற்றங்களில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
சிறிய அறையில் கட்சி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது, எஸ்.ஒ.பி. விதிகளை மீறியது, கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை உட்படுத்திய நிகழ்வுகளை நடத்தியது போன்ற குற்றங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.
பொதுவில், மலாக்க மாநிலத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மத்தியில் விதிகளை கடைபிடிக்கும் போக்கு 95 விழுக்காடு மனநிறைவளிக்கும் வகையில் உள்ளது. எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக கடைபிடிக்கப்பவதை உறுதி செய்ய கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.