கோலாலம்பூர், நவ 18- சமூக ஊடகங்கள் வாயிலாக இனம், சமயம் மற்றும் மலாய் ஆட்சியாளர்களை சிறுமைப்படுத்துவோருக்கு எதிராக ஆக்ககரமான நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மறுஆய்வு செய்யும்படி தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தை எம்.சி.எம்.சி. சட்டத் துறைத் தலைவரின் பார்வைக்கு கொண்டுச் சென்றுள்ளதாக அறியப்படுகிறது என்று தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா கூறினார்.
இஸ்லாம் மற்றும் பிற மதங்களை சிறுமைப்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிடுவோர் மீது சமரசம் இன்றி தீர்க்கமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க நடப்புச் சட்டத்தின் கீழ் தெளிவான விளக்கத்தை இந்நடவடிக்கை அளிக்கும் என்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.
பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை அடையாளம் காண்பதற்கான ஒருங்கிணைப்பை எளிதாக்கும் வகையில் அரச மலேசிய போலீஸ் படையின் இணைய குற்றப் புலனாய்வு மையத்துடனான இயங்கு தன்மையை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போதுமான ஆள்பலம் இல்லாத காரணத்தால் சமூக ஊடகங்களில் பரப்பப்டும் இத்தகைய செய்திகளை கண்காணிப்பதில் பலவீனம் நிலவுகிறதா? என வான் ஹசான் எழுப்பிய துணைக் கேள்விக்கு, இந்த இரண்டு விவகாரங்களுக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சர் பதிலளித்தார்.