|
|
மலாக்கா, நவ 19- மலாக்கா மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவின் போது பொது அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் சினமூட்டும் செயலில் ஈடுபடும் தரப்பினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். வாக்காளர்கள் தங்கள் கடமையை முறையாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக பாதுகாப்புக்கு தனது துறை உத்தரவாதம் அளித்துள்ளதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் மஜிட் முகமது அலி கூறினார். பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு ஏற்படக்கூடிய அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில் மாநில காவல் துறை நிலையில் அனைத்து வளங்களையும் ஒன்று திரட்டும் அதேவேளையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திலிருந்துதேவையான மனித ஆற்றலும் பெறப்படும் என்று அவர் சொன்னார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்தபடி காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை போலீஸ் துறை உறுதி செய்யும் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குறித்து அச்சப்படாமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வருமாறு தகுதி பெற்ற வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார். மாநில மக்கள் தேர்தல் முடிவுகளை முதிர்ச்சியுடனும் திறந்த மனத்துடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். முதலமைச்சர் டத்தோஸ்ரீ சுலைமான் முகமது அலிக்கு வழங்கி வந்த ஆதரவை நான்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து அக்டோபர் 4 ஆம் தேதி மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு அங்கு தேர்தல் நடத்தப்படுகிறது.