ECONOMYPBTSELANGOR

பொருள்களை இணையம் வழி சந்தைப்படுத்த செல்டேக் திட்டத்தில் பங்கேற்பீர்

கோலாலம்பூர், நவ 20– செல்டேக் எனப்படும் சிலாங்கூர் இலக்கவியல் மின்-விநியோக தொடர் திட்டத்தில் கிடைக்கும் அனுகூலங்களைப் பயன்படுத்த தவற வேண்டாம் என்று சிப்ஸ் எனப்படும் 2021 சிலாங்கூர் அனைத்துல வர்த்தக உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டுள்ள தொழில் முனைவோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தொழில் முனைவோர் தங்கள் பொருள்களை பிரபலப்படுத்துவதற்கு உதவக் கூடிய கருவியாக வர்த்தகத்தை சந்தைப் படுத்தும் இந்த தளம் விளங்குகிறது என்று செல்டேக் வர்த்தக மேம்பாட்டு நிர்வாகி  முகமது அலிப் யாஹ்யா கூறினார்.

கமிஷன் தொகையாக வெறும் எட்டு விழுக்காடு வழங்கப்படுவது தொழில் முனைவோருக்கு செல்டேக் வழங்கும் சலுகைகளில் ஒன்றாக  விளங்குகிறது. வெளியில் இதற்கு கூடுதலான தொகை விதிக்கப்படுகிறது. தவிர, முகவர்களுக்கு இலவசமாக பட்டுவாடா சேவையும் வழங்கப்படுகிறது என்றார் அவர்.

2021 சிப்ஸ் மாநாட்டில் பங்கு கொண்டுள்ள தொழில்முனைவோரில் பலர் இன்னும் செல்டேக் திட்டத்தில் பங்கு பெறவில்லை எனக் கூறிய அவர், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அவர்கள் செல்டேக் கண்காட்சி கூடத்திற்கு வருகை புரிவார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை 10,000 பொருள்களை உள்ளடக்கிய 5,000 முகவர்கள் இதில் பங்கேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செல்டேக் திட்டத்தில் பங்கேற்பதற்கு மலேசிய நிறுவன ஆணையத்தின் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு ஆகியவை மட்டுமே இருந்தால் போதுமானது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :