ஷா ஆலம் நவ 25- காக்கைகளை சுடும் நடவடிக்கையை ஷா ஆலம் மாநகர் மன்றம் வரும் ஞாயிற்றுக் கிழமையன்று மேற்கொள்ளவுள்ளது. பொது அமைதிக்கு இடையூறாக இருந்து வரும் அந்த பறவையினத்தின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வருடாந்திர நிகழ்வாக விளங்கும் இந்த காக்கைகளை சுடும் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை செக்சன் 2 முதல் செக்சன் 25 வரையிலான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக, தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
காக்கைகளை சுடும் பகுதியிலிருந்து பொதுமக்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
உணவுக்காக குப்பைத் தொட்டிகளை கிளரி அசுத்தப்படுத்துவது காக்கைகளின் பழக்கமாக உள்ளதால் ஷா ஆலம் வட்டாரத்தில் சுத்தத்தைப் பேணும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
காக்கைகளால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டது தொடர்பில் இவ்வாண்டில் 89 புகார்கள் கிடைக்கப்பெற்றதாக கூறிய அவர், இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக அந்த பறவைகளைச் சுடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.