ஷா ஆலம், நவ 28- சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் கடந்த ஒரு மாத காலமாக மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 2021 வேலை வாய்ப்பு பயணத்தின் வழி 385 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
இதில் கலந்து கொண்ட மேலும் 932 பேர் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
கடந்த ஒரு மாத காலத்தில் ஆறு வேலை வாய்ப்புச் சந்தைகள் நடத்தப்பட்ட வேளையில் அவற்றில் ஐந்து சந்தைகளில் 1,891 பேர் நேர்முகப் பேட்டியில் கலந்து கொண்டனர் என்று அவர் சொன்னார்.
அவர்களில் 385 பேர் அல்லது 20 விழுக்காட்டினருக்கு வேலை கிடைத்துள்ளது. மேலும் 932 பேர் அல்லது 49.3 விழுக்காட்டினர் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்றார் அவர்.
ஷா ஆலம், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், உலு லங்காட், பெட்டாலிங் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட ஐந்து வேலை வாய்ப்புச் சந்தைகளில் 146 முதலாளிகள் பங்கு கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் வேலை தேடுவோருக்கு உதவுவதை நோக்கமாக கொண்ட இந்த வேலை வாய்ப்புச் சந்தை கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது.
நேற்று ஷா ஆலமில் நடைபெற்ற வேலை வாய்ப்புச் சந்தையின் கடைசி நிகழ்வில் 8,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக கைருடின் குறிப்பிட்டார்.