சுபாங், நவ 28- சிலாங்கூர் வான் கண்காட்சியை எஸ்.ஏ.எஸ்.) நடத்துவதற்கு அடுத்தாண்டில் 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
இந்த ஒதுக்கீட்டின் வழி இந்த கண்காட்சியை மேலும் பெரிய அளவில் நடத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாக அவர் சொன்னார்.
உலகின் தலைசிறந்த வான் போக்குவரத்து மற்றும் விமானத் தொழில் துறையினரை ஒன்றிணைக்கும் இந்த கண்காட்சியை மேலும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்வதற்கு ஏதுவாக வரும் 2022 வரவு செலவுத் திட்டத்தில் 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 20 லட்சம் வெள்ளியிலிருந்து 50 லட்சம் வெள்ளியாக உயர்த்தப்பட்டது ஏற்பட்டாளர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டில் நிச்சயமாக இந்த கண்காட்சியை மேலும் பெரிய அளவில் ஏற்பாடு செய்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.
2021 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் வான் கண்காட்சி சுபாங் ஸ்கைபார்க் வட்டார வான் போக்குவரத்து மையத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த மூன்று கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த 43 நிறுவனங்கள் பங்கு கொண்டன.