கிள்ளான், டிச 7- தென் கிள்ளான் மாவட்ட போலீசார் கள்ள சூதாட்டத்திற்கு எதிராக இம்மாதம் முதல் தேதி தொடங்கி மேற்கொண்ட ஒன்பது அதிரடி நடவடிக்கைகளில் 65,000 வெள்ளி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 25 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கள்ள சூதாட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக தமது தரப்பு தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபூங் கூறினார்.
அதே சமயம், பொதுமக்களும் காவல் துறையினரின் கண்களாகவும் காதுகளாகவும் இருந்து இத்தகைய குற்றச்செயல்களைத் துடைத்தொழிப்பதில் தங்களுக்கு துணை புரிய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இங்குள்ள பண்டார் புத்ரியில் செயல்பட்டு வந்த கள்ள சூதாட்ட மையம் மீது நடவடிக்கை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பந்தப்பட்ட மையம் மீது இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புக்குப் பின்னர் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
இந்த சோதனை நடவடிக்கையில் அம்மையத்தின் பராமரிப்பாளர் மற்றும் நான்கு வாடிக்கையாளர்கள் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டர்.
அந்த மையத்திலிருந்து ஒரு கணினி, 200 வெள்ளி ரொக்கம் உள்பட 15,000 வெள்ளி மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.