ஷாஆலம், டிச 14- இவ்வாண்டில் இரு நீர் தூய்மைக்கேட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே ஆயர் சிலாங்கூர் நிறுவனம் புகார்களைப் பெற்றுள்ளது. கடந்தாண்டில் இந்த எண்ணிக்கை ஏழாக இருந்தது.
அவ்விரு சம்பவங்களும் செமினி ஆற்றில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஸமான் கூறினார்.
இந்த இரு நீர் மாசுபாடு சம்பவங்களாலும் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டு பயனீட்டாளர்களுக்கு கடும் விளைவுகளை உண்டாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய சம்பவங்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இரசாயனக் கழிவுகளை ஆற்றில் கொட்டுவதன் மூலம் நீர் தூய்மைக்கேட்டினை உருவாக்கும் தரப்பினர் விஷயத்தில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளப்படாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நேற்று இங்கு இயங்கலை வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு சொன்னார்.
நீர் மாசுபாடு பிரச்சனையை முற்றாக தவிர்ப்பது இயலாத காரியம் எனக் கூறிய அவர், எனினும் தமது நிறுவனம் இயன்ற வரை நீர் மாசுபடுவதிலிருந்து தடுக்க முயன்று வருகிறது என்றார்.
இவ்விஷயத்தில் நாம் எப்போதும் அதிர்ஷ்டத்தையும் நம்பிக்கையையும் சார்ந்திருக்க முடியாது. மாறாக அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் மிக அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி ஏற்பட்ட நீர் தூய்மைக்கேட்டுச் சம்பவத்தினால் ஐந்து மாவட்டங்களில் உள்ள 463 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.