கோலாலம்பூர், டிச 15- இணைய மோசடியில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் மூன்று ஆடவர்களை போலீசார் நேற்று தலைநகர் ஜாலான் கூச்சாய் மாஜவிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் கைது செய்தனர்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று மடிக்கணினிகள், மூன்று கைப்பேசிகள், இணைய சேவைக்கான மோடம், குறிப்பு புத்தகம் ஆகிய பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமிஹிஸாம் அப்துல் சுக்கோர் கூறினார்.
இணைத் தளத்தைப் பயன்படுத்தி கால்பந்து போட்டியை கண்காணிக்கும் நடத்துநர்களாக அந்த மூன்று சந்தேகப்பேர்வழிகளும் வேலை செய்து வந்ததாக அவர் சொன்னார்.
வீசாட் செயலி வாயிலாக பொதுமக்களை தங்கள் வலையில் சிக்க வைப்பது இந்த மோசடிக் கும்பலின் பாணியாகும். உள்நாட்டினரை இலக்காக கொண்ட இந்த கும்பல் கடந்த 2020 முதல் இந்த இணைய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது தொடக்க கட்ட விசாரணயில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அறிமுகம் இல்லாத நபர்கள் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு தெளிவான விபரங்களைக் கொண்டிராத முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்று அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.