ஷா ஆலம், டிச 18– கிள்ளான் வட்டாரத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 7.00 மணியளவில் 1,011 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் மூன்று தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.
தெலுக் கோங் ஆரம்ப பள்ளியில் செயல்படும் துயர் துடைப்பு மையத்தில் மிக அதிகமாக அதாவது 681 பேர் அடைக்கலம் புகுந்துள்ளனர். இதுவே வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக விளங்குகிறது.
மேலும் 265 பேர் அஸ்-இஸ்லா பள்ளிவாசலிலும் 74 பேர் அல்-உபுடியா பள்ளிவாசலிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நோராஸாம் தெரிவித்தார்.
நேற்று மாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கிள்ளான் வட்டாரத்தின் 20 பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பூலாவ் இண்டா, பண்டமாரான், பண்டார் பொட்டானிக், தெலுக் காடோங், பண்டார் சுல்தான் சுலைமான், புக்கிட் திங்கி ஆகியவையே பாதிப்புக்குள்ளான பகுதிகளாகும்.