! ஷா ஆலம், டிச 18- வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் இலிட் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள யு.எஸ்.ஜே. ஓய்வுப் பகுதி அருகே நேற்றிரவு நிகழ்ந்த நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் எட்டுச் சிறார்கள் உள்பட பத்து பேர் உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் பலியானவர்களில் ஒன்பது பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். தாய் மற்றும் அவரின் எட்டு பிள்ளைகளோடு ஆடவர் ஒருவரும் இவ்விபத்தில் பலியானதாக பெரித்தா ஹரியான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு புரோட்டோன் வீரா ரகக் கார்கள், ஒரு பெரேடுவா அக்ஸியா கார் மற்றும் ஒரு டிரெய்லர் லோரி சம்பந்தப்பட்ட இவ்விபத்து நேற்றிரவு 11.45 மணியளவில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.