ஷா ஆலம், டிச 23 - சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 103 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 11.04 மணி நிலவரப்படி 18,126 ஆகக் குறைந்துள்ளது. இத்தகவலை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்றிரவு தனது ட்விட்டர் பதிவில் அறிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்பும் வகையில் எஞ்சிய பொருட்களை பிரித்தெடுப்பது மற்றும் வீடுகளை சுத்தம் செய்வது போன்ற பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். மந்திரி புசார் நேற்று பிற்பகலில் ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹானுடன் இணைந்து பாடாங் ஜாவாவில் உள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்குப்பை சேகரிப்பு மையத்தை பார்வையிட்டார். நேற்று காலை 9.00 மணி வரை எட்டு மாவட்டங்களில் 494 லோரிகள் மற்றும் 39 மணவாரி இயந்திரங்கள் மூலம் மொத்தம் 2,376 மெட்ரிக் டன் கழிவுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. உலு லங்காட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால்பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மந்திரி புசார், அப்பகுதியை மீண்டும் நிர்மாணிக்க சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.