ஷா ஆலம், டிச 23- தாமான் ஸ்ரீ மூடாவில் வடிகால் முறையை மேம்படுத்த சிலாங்கூர் வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை (ஜேபிஎஸ்) மூலம் மாநில அரசு 1 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது வரை நான்கு விழுக்காடு பூர்த்தியடைந்துள்ள நிலையில் ஜூலை 1, 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முழுமையாக தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார். மூன்று பம்ப் ஸ்க்ரூ யூனிட்களை நிறுவுவதற்கு ஏதுவாக மேடை கட்டமைப்பை அமைப்பது மற்றும் அப்பகுதியின் பிரதான குழாயை மேம்படுத்துவது ஆகியவற்றை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளதாக அவர் சொன்னார். நடப்புத் தேவை மற்றும் சூழலின் அடிப்படையில் இங்கு நிலவும் வெள்ளப் பிரச்சினையை முழுமையாக தீர்க்க இந்த திட்டம் உதவும் என்று நம்புகிறோம் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளம் ஏற்பட்டதற்கு அங்குள்ள நீர் இறைக்கும் பம்ப் சரி செய்யப்படாததே காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இஷாம், அங்கு ஏற்கனவே இரண்டு நடமாடும் பம்ப் இயந்திரங்கள் உள்ள நிலையில் கூடுதலாக இரண்டு புதிய யூனிட்களைச் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த நான்கு பம்ப் செட்டுகளின் செயல்பாடுகளை நவம்பர் 17 அன்று தாமும் சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவும் நேரில் சென்று பார்வையிட்டதாக அவர் விளக்கினார். பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்டுத்தும் வகையிலான தவறான தகவல்களை வெளியிடுவதை தவிர்க்கும்படி ஊடகங்கள உள்ளிட்ட தரப்பினரை அவர் கேட்டுக் கொண்டார்.