ஷா ஆலம், டிச 26- வெள்ளம் வடிந்த போதிலும் தற்காலிக துயர் துடைப்பு மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில பேரிடர் செயல்குழுவின் முடிவுக்குப் பின்னரே துயர் துடைப்பு மையங்களை மூடுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் சொன்னார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும் வசதிக்காகவும் துயர் துடைப்பு மையங்கள் தொடர்ந்து செயல்படும். பெரும்பாலான வீடுகள் இன்னும் சுத்தம் செய்யப்படாததால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இங்கு தங்கி வேண்டியுள்ளது என்றார் அவர்.
பெரும்பாலான வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு விட்டதால் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை 30,000 பேர் வரை இந்த துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தனர். நேற்று இந்த எண்ணிக்கை 15,000 ஆக குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 17 முதல் 19 ஆம் தேதி வரை பெய்த அடை மழை காரணமாக சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.