கோலாலம்பூர், டிச 27 – இன்று காலை வரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 8,598 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 28,005 பேர் இன்னும் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் கிளந்தான், சிலாங்கூர், பகாங், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் உள்ள 183 துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக சமூக நலத்துறையின் இன்போ பெஞ்சானா அகப்பக்கம் கூறியது.
சிலாங்கூரில், நேற்றிரவு 81 துயர் துடைப்பு மையங்களில் 15,354 பேர் தங்கியிருந்தனர். இன்று காலை நிவாரண மையங்களின் எண்ணிக்கை 61ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,864 ஆகவும் குறைந்துள்ளது.
இதற்கிடையில், வெள்ளக் கழிவுகளை எரிக்க வேண்டாம் என்று பொது மக்களை சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று மாலை 5.50 மணியளவில் வெள்ளத்தால் சேதமடைந்த தளவாடங்கள் போன்ற வெள்ளக் கழிவுகள் எரியூட்டப்பட்டதால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு நேற்று மாலை தாங்கள் அழைப்பை பெற்றதாகக் கூறிய அவர், இதன் தொடர்பில் காப்பார், கிள்ளான் பகுதிகளில் இதுவரை இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.