கோலாலம்பூர், டிச 27– வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பி.டி.பி.டி.என். எனப்படும் தேசிய உயர்கல்விக் கடனுதவிக் கழகத்தின் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கு நாளை தொடங்கி வரும் 2022 மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பி.டி.பி.டி.என். (www.ptptn.gov.my/penangguhanBayaranBalikBanjir) அதிகாரபூர்வ அகப்பக்கம் வாயிலாகவும் அருகிலுள்ள பி.டி.பி.டி.என் அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் அதற்கான விண்ணப்பத்தை செய்யலாம் என்று அந்த கல்விக் கடனுதவிக் கழகம் அறிக்கை ஒன்றில் கூறியது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விண்ணப்பத்தை செய்யும் போது எந்தவொரு கூடுதல் ஆவணத்தையும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றும் அது தெரிவித்தது.
விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட மாதத்திலிருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு கடனை ஒத்தி வைப்பதற்கான அனுமதி வழங்கப்படும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று வேலை நாட்களுக்குள் மின்னஞ்சல் வழி முடிவுகள் அறிவிக்கப்படும்.
விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டது தொடர்பான விபரங்கள் தங்களுக்கு முறையாக வந்து கிடைப்பதை உறுதி செய்ய தங்களைப் பற்றிய விபரங்களை மேம்படுத்திக் கொள்ளுபடியும் பி.டி.பி.டி.என். பயனாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.