சுபாங், டிச 29- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கடந்த திங்கள் கிழமை வரை 3,986 டன் குப்பைகளை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் அகற்றியுள்ளது.
பன்னிரண்டு பகுதிகளை உள்ளடக்கிய இந்த குப்பை அகற்றும் பணி இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்கி கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக மாநகர் மன்ற டத்தோ பண்டார் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.
தாமான் கின்ராரா பகுதியில் வெள்ளத்திற்கு பின் குவிந்த குப்பைகளை மாநகர் மன்ற குத்தகையாளர் முழுமையாக அகற்றி விட்டார். இதற்கு மேல் அங்கு குவியும் குப்பைகளை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனப் பணியாளர்கள் அகற்றுவர் என அவர் குறிப்பிட்டார்.
இதர பகுதிகளைப் பொறுத்த வரை மாநகர் மன்றம் இரண்டாம் சுற்று நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குப்பைகள் முழுமையாக அகற்றப்படும் வரை இப்பணி தொடரும் என்றார் அவர்.
தாமான் கின்ராரா, கம்போங் தெங்கா ஏ, கம்போங் தெங்கா பி, கம்போங் கோல சுங்கை பாரு, கம்போங் கெனாங்கான், கம்போங் பத்து 13 ஆகியவையே பாதிக்கப்பட்ட பகுதிகளாகும் என நோராய்னி சொன்னார்.
இவை தவிர, கம்போங் பெர்சத்து, கம்போங் ஸ்ரீ அண்டாலாஸ், கம்போங் ஸ்ரீ அமான், கம்போங் ஸ்ரீ பூச்சோங், கம்போங் ஸ்ரீ லங்காஸ், கம்போங் புக்கிட் லஞ்சோங் ஆகியவையும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.