கோலாலம்பூர், டிச 29- பேரிடர் காரணங்களுக்காக பணத்தை மீட்க சட்ட விதிகளில் இடமில்லை என்று ஊழியர் சேம நிதி வாரியம் (இ.பி.எஃப்.) கூறுகிறது.
முதலாவது கணக்கில் உள்ள 70 விழுக்காட்டு தொகை முதுமை கால பயன்பாட்டிற்காகவும் இரண்டாவது கணக்கில் உள்ள 30 விழுக்காட்டுத் தொகையை ஓய்வுக்குப் பின்னர் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் பயன்படுத்த 1991 ஆம் ஆண்டு இ.பி.எஃப். சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது என்று அந்த ஓய்வூதிய நிதிக் கழகம் அறிக்கை ஒன்றில் கூறியது.
ஓய்வு காலத்திற்கான சேமிப்பை உறுப்பினர்கள் பெருக்குவதில் தங்களுக்கு உள்ள கடப்பாட்டை இ.பி.எஃப் உறுதிப்படுத்துகிறது. உறுப்பினர்களின் ஒய்வு கால சேமிப்பு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய ஐ.சித்ரா திட்டத்தின் கீழ் எந்வொரு சிறப்பு நிதி மீட்புத் திட்டமும் நிறுத்தப்படுவதை அது ஆதரிக்கிறது என அந்த வாரியம் தெரிவித்தது.
கடந்த 2020 இல் ஐ-லெஸ்தாரி, ஐ-சினார் மற்றும் இவ்வாண்டு ஜூலை மாதம் ஐ-சித்ரா பண மீட்பு திட்டங்கள் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் அமல்படுத்தப்பட்டதாகவும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் பொருளாதார மந்த நிலை காலத்தில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு இந்த திட்டங்களை அமல்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இத்திட்டங்களை அமல்படுத்திய காரணத்தால் 61 லட்சம் உறுப்பினர்களின் சேமிப்பு கணக்கில் பத்தாயிரம் வெள்ளிக்கும் குறைவான தொகையை எஞ்சியுள்ளது. மேலும் 36 லட்சம் உறுப்பினர்கள் ஆயிரம் வெள்ளிக்கும் குறைவான தொகையை மட்டுமே கொண்டுள்ளனர் என இ.பி.எஃப். தெரிவித்தது.
அவசரகாலத் தேவைகளுக்காக இ.பி.எஃப்.பிலிருந்து பணத்தை மீட்பவர்களில் அதிகானோர் பூமிபுத்ராக்களே என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.