கோலாலம்பூர், டிச. 29 – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களில் நேற்றிரவு வரை 11,306 பேர் 98 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். நேற்று பிற்பகலில் 107 நிவாரண மையங்களில் 16,281 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
பகாங், சிலாங்கூர், கிளந்தான், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களாவர்.
பகாங்கில் நேற்றிரவு வரை 75 துயர் துடைப்பு மையங்களில் 8,796 பேர் தங்கியிருந்ததாக சமூக நலத் துறை இன்ஃபோ செஞ்சானா அகப்பக்கம் கூறியது. இவர்கள் பெந்தோங், தெமர்லோ, பெரா, மாரான், குவாந்தான் மற்றும் பெக்கான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவ்வர்.
சிலாங்கூரில், நேற்று இரவு 8.00 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,387 பேர் இன்னும் 19 துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது டிவிட்டர் பதிவில் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக குப்பை சேகரிக்கும் தோம்புகளை ஷா ஆலம் மாநகர் மன்றம், கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் மற்றும் இதர நிறுறவனங்கள் இலவசமாக வழங்கியதாக மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.
இதுபோன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முயற்சிக்கும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அது அறிவுறுத்தியுள்ளது.