ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோலாலம்பூர், சிலாங்கூர் பயனீட்டாளர்களுக்கு ஜனவரி மாதம் தண்ணீர்க் கட்டண விலக்களிப்பு

ஷா ஆலம், டிச 31 - சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அடுத்தாண்டு ஜனவரி  மாதத்திற்கான தண்ணீர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிலாங்கூர் அரசாங்கத்தால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட  சிலாங்கூர் பங்கிட் எனும்  திட்டத்தின்  ஒரு பகுதியாக இந்த நீர் கட்டண விலக்களிப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனத்தின் வர்த்தகத் தொடர் பிரிவுத் தலைவர் எலினா பாஸ்ரி கூறினார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் தண்ணீர் கட்டணம் செலுத்துவதிலிருந்து  ஒரு மாதத்திற்கு இயல்பாக விலக்கு பெறுவார்கள். மேலும் அவர்கள் எந்தப் படிவத்தையும் பூர்த்தி செய்யவோ அல்லது ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திடம் சமர்ப்பிக்கவோ தேவையில்லை என்றார் அவர்.

இந்த கட்டண விலக்களிப்பு காலத்தில் மாதாந்திர தண்ணீர் கட்டண பில்கள் ஆயர் சிலாங்கூர் மூலம் தொடர்ந்து வழங்கப்படும். 

இருப்பினும், தண்ணீர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு பெற தகுதியுடைய வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என்று எலினா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் எதிர் நோக்கும் சிரமங்களை குறைக்கும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

Pengarang :