ஷா ஆலம், டிச 31- வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணிகளுக்காக சிலாங்கூர் அரசு இதுவரை 60 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
குப்பைகளை அகற்றுவது மற்றும் துப்புரவுப் பணிகளுக்காக மாநில அரசுக்கு 1 கோடி முதல் 20 கோடி வெள்ளி வரை தேவைப்படுவதாக அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநில அரச வெள்ள மீட்பு திட்டங்களுக்காக இக்தியார் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 10 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்திருந்தது. அதில் துப்புரவு மற்றும் மீட்சித் திட்டங்களுக்கு 2 கோடி வெள்ளியும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு 8 கோடி வெள்ளியும் ஒதுக்கப்பட்டிருந்தது.
தற்போது நாங்கள் உலு லங்காட் மாவட்டத்தின் தாமான் ஸ்ரீ நண்டிங் பகுதியில் துப்புரவுப் பணிகளை மிகப்பெரிய அளவில் மேற்கொண்டு வருகிறோம். இங்கு சுமார் 70 விழுக்காட்டு பணிகள் முற்றுப் பெற்றுள்ளன.
அடுத்ததாக ஸ்ரீ மூடா பகுதியை இலக்காக கொண்டுள்ளோம். இங்கு நிலைமை அவ்வளவாக முன்னேற்றம் காணவில்லை. இங்கு குப்பைகளை அகற்றுவதற்கு 200 லோரிகள் வரை பயன்படுத்தப்படும் வேளையில் இன்னும் ஒரு வார காலத்தில் நிலைமை சீரடையும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.