ஷா ஆலம், ஜன 1- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா பகுதிவாசிகளின் வசதிக்காக தற்காலிகத் தடங்களில் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஆறு வழித்தடங்களில் இச்சேவை வழங்கப்டுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது முகநூல் பதிவில் தெரிவித்தார். தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் வசிப்பவர்களின் வசதிக்காக சிலாங்கூர் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவை தற்காலிக அடிப்படையில் மேம்படுத்தப்பட்டபுதிய தடங்களில் வழங்கப்படுகிறது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்கிய வழித்தடங்களின் பட்டியல்படி இச்சேவை ஸ்ரீ மூடா மையப் பகுதியில் தொடங்கி ஸ்ரீ மூடா காவல் நிலையம், ஜாலான் ஹஸ்ராட் நிறுத்தம், என்.எஸ்.கே. சூப்பர் மார்க்கெட், பெட்ரோன் ஸ்ரீ மூடா, அன்டோரா அபார்ட்மெண்ட்ஸ் மற்றும் ஸ்ரீ முடா மையப் பகுதியில் முடிவடைகிறது. இச்சேவை ஒரு மணிநேர இடைவெளியில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்கொள்ளப்படும்.