ஷா ஆலம், ஜன 3- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தை கோல குபு பாரு தொகுதி வரும் 9 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடத்தவுள்ளது.
கோல குபு பாரு, கம்போங் சுவாங் ராசா சமூக மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார்.
இந்த சினோவேக் வகை ஊக்கத் தடுப்பூசி தொகுதியிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த தடுப்பூசித் திட்டத்திற்காக கோல குபு பாரு தொகுதிக்கு 1,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சினோவேக் தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்கள் கடந்தவர்கள் இந்த ஊக்கத் தடுப்புசியைப் பெறலாம் எனக் கூறிய அவர், மைசெஜாத்ரா செயலி வழி முன்பதிவு கிடைக்காதவர்களும் இத்திட்டத்தில் பங்கேற்கலாம் என்றார்.
இத்தடுப்பூசித் திட்டம் தொடர்பான மேல் விபரங்களுக்கு 03-60645505 என்ற தொலைபேசி எண்களில் தொகுதி சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.