கோலாலம்பூர், ஜன 3- பகாங், சிலாங்கூர், ஜோகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள பல ஆறுகள் இன்னும் அபாய கட்டத்தில் இருப்பதால் அம்மாநிலங்களில் வசிப்பவர்கள் விழிப்புடனும் அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்றி நடக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பகாங்கில், பெராவில் உள்ள பாடாங் கூடாங் பாலம், ஜெராண்டுட்டில் உள்ள பாயா ஜின்டாங் நிலையம் மற்றும் தெமர்லோவில் உள்ள சுங்கை பகாங், கோலா குராவ் ஆகிய இடங்களில் உள்ள சுங்கை செர்த்திங் ஆற்றின் நீர்மட்டம் ஆபத்தான அளவில் இருப்பதோடு நீர் மட்டமும் உயர்ந்து வருவதாக நீர்பாசன மற்றும் வடிகால் துறை (ஜே.பி.எஸ்.) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மற்ற ஆறுகள், அதாவது ரொம்பினில் உள்ள சுங்கை புகின், லிப்பிஸில் உள்ள செகார் பெரா பாலம் மற்றும் மாரானில் உள்ள சுங்கை லூயிட், கம்போங் சுபு ஆகிய ஆறுகளும் இன்னும் ஆபத்தான கட்டத்தில் உள்ளன. சிலாங்கூரில், புக்கிட் சாங்காங்கில் உள்ள சுங்கை லங்காட் ஆற்றில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளது. ஜொகூர் சிகாமட்டில் உள்ள இரண்டு ஆறுகள், அதாவது லாடாங் ச்சா ஆவில் உள்ள சுங்கை லெனிக் மற்றும் பண்டார் சிகாமட்டில் உள்ள சுங்கை சிகாமட் ஆகியவை ஆபத்தான அளவைப் பதிவு செய்துள்ளன. அதே சமயம் தங்காக்கின் கம்போங் ஸ்ரீ மக்மூரில் உள்ள சுங்கை தங்காக் ஆற்றுப் பகுதி அபாய நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெகிரி செம்பிலானில் பெக்கான் ரொம்பினில் உள்ள சுங்கை மூவார், கம்போங் பெரெம்பாங்கில் உள்ள சுங்கை ஜெம்போல் மற்றும் சுங்கை மூவார் ஆகியவையும் இன்னும் ஆபத்தான கட்டத்தில் உள்ளன. சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா, பகாங் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் இன்று வரை 243 நிலச்சரிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சபாவில் 7 இடங்களிலும் நெகிரி செம்பிலானில் 6 இடங்களிலும் ஜோகூரில் ஒரு இடத்திலும் இன்று கூடுதலாக நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக கனிம மற்றும் புவி அறிவியல் துறை தெரிவித்துள்ளது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/10/sepang-BANJIR-lpr-960x633.jpg)