ஷா ஆலம், டிச 3- பந்திங், கம்போங் சுங்கை நங்கா பகுதியில் நேற்று மாலை வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் ஸ்ரீ லங்காட் சமூக மண்டத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்த வெள்ளச் சம்பவம் தொடர்பான தகவலை தமது தரப்பு நேற்றிரவு 7.30 மணியளவில் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.
இதனைத் தொடர்ந்து எழு வீரர்கள் அடங்கிய குழு அவசர சிகிச்சை வேன், படகு மற்றும் தேவையான இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
இரவு 8.00 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த போது அங்கு இரண்டு அடி உயரத்திற்கு வெள்ளம் ஏற்பட்டிருந்ததோடு நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதும் கண்டறியப்பட்டது. உடனடி நடவடிக்கையாக அனைத்து குடும்பங்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
வெள்ளம் சூழந்த இடத்தில் தமது தரப்பு கண்காணிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.